Wednesday, October 27, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx

Tuesday, October 26, 2010

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்

பல்வேறு நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்களின் குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையாக தரப்படுகிறது.குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகள் சிகிச்சை பெறலாம். இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் கருப்பை ஆகிய உறுப்புகளில் ஏற்படும், பட்டியலிடப்பட 51 வகை நோய்களுக்கு மட்டும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


                 பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என, புதிது புதிதாக நோய்கள் ஏற்படும் இன்றைய சூழலில், குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதால், இத்திட்டத்தின் கீழ் வராத நோய்களால் பாதிக்கப்படுவோரின் நிலை பரிதாபமாக உள்ளது.கூடுதல் கவனிப்பு, நவீன சிகிச்சை போன்ற காரணங்களால், இத்திட்ட பயனாளிகள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற விரும்புகின்றனர். அவர்களில் பெரும்பாலோருக்கு, அரசு நிர்ணயித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை.
            
                                      சாமானியர்களுக்கும் தரமான மருத்துவம் வழங்குவது அரசின் கடமை. இதற்கு தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் வழி வகுத்துள்ளது. இத்திட்டம் முழு வெற்றி பெற, காப்பீட்டு தொகைக்கான உச்சவரம்பை நீக்கவும், அனைத்து வகை நோய்களுக்கும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பு. இல்லையெனில் இத்திட்டத்தால், ஏழைகளைவிட, தனியார் மருத்துவமனைகளும், காப்பீட்டு நிறுவனமும் தான் அதிகம் பயன் பெறும்.

                                 சிகிச்சைக்கான தொகையை பயனாளிகளுக்கு வழங்குவதில், ஸ்டார் காப்பீட்டு நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது. இதனால், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு, சில தனியார் மருத்துவமனைகளில் கிகிச்சைக்கான முழு தொகையும், சில மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அளவு தொகையும் பயனாளிக்கு தரப்படுகிறது. இக்குறையை களைய, காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
                                  

Wednesday, October 13, 2010

கண்பார்வையற்றவரின் சாதனை முயற்சி: கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்

திருநெல்வேலி : கண்பார்வையற்றவர் கணிதம் மற்றும் புள்ளியியலில் டாக்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் "கணிதவியல் மற்றும் புள்ளியல்' பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு பிஎச்.டி.,டாக்டர் பெற்றவர் முழுவதும் கண்பார்வையற்ற சிவசக்திவேல். அனைவரது புருவங்களையும் உயர்த்தி அவர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். வழக்கமாக பார்வையற்றவர்கள் வரலாறு, தமிழ் போன்ற கலைப்பாடங்களைத்தான் தேர்ந்தெடுத்து படிப்பார்கள்.

ஆனால் கணிதம் மற்றும் புள்ளியியலில் பி.எச்டி., டாக்டர் பட்டம் பெற்ற சிவசக்திவேல் இதுகுறித்து கூறுகையில், எனக்கு சொந்த ஊர் அருகில் உள்ள ஏழுசாட்டுப்பத்தாகும். நான் கன்னியாகுமரி, அந்தோணியார் பள்ளியில் பயிலும் வரையிலும் கண்பார்வை நன்றாக இருந்தது. இருப்பினும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியர் எழுதிபோட்டதை கரும்பலகைக்கு அருகில் வந்து பார்த்து எழுதிவிட்டு செல்லும் நிலையில் இருந்தேன். நான் பணிபுரியும் விவேகானந்தா கல்லூரியில்தான் பி.ஏஸ்.சி.,பயின்றேன். திருச்செந்தூர் கல்லூரியில் எம்.எஸ்.சி.,யும், மதுரையில் எம்.பில் பயின்றேன். விவேகானந்தா கல்லூரியில் துணைப்பேராசிரியராக 1983ல் பணிக்கு சேர்ந்தேன். அப்போது பார்வை இருந்தது. பணியில் சேர்ந்த பிறகு முழுமையாக பிறகு அரைகுறையாக இருந்த பார்வை முழுவதுமாக பறிபோனது. இதனால் நான் நிறைய சிரமங்களை சந்தித்தேன்.

                                            
பார்வையற்றவர் வகுப்பு நடத்த முடியாது என மாணவர்கள் எழுதியதுபோலசிலர் புகார் மனுக்கள் போட்டனர். எனக்கு கண் பார்வை பறிபோனது போல வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது.இருப்பினும் என் மீது மாணவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். 1995ல் கண்பார்வையற்றவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வந்தது. அதன்படி எனக்கு பாதுகாப்பு கிடைத்தது. இத்தகைய காலகட்டங்கள் போராட்டம் மிகுந்தவை. பி.எச்.டி.,க்கு 2005ல் பதிவு செய்தேன். இடையில் பார்வை போனதால் வழக்கமான பார்வையற்றோர்கள் பின்பற்றும் பிரெய்லி முறையை நான் கற்றுக்கொள்ளவில்லை. எனவேயாராவது நண்பர்கள் பாடத்தை சொல்லச்சொல்ல நன்றாக கேட்டுக்கொண்டு எழுதி பழகினேன்.

வகுப்பில் மாணவர்கள் சேட்டை செய்வார்கள் என்பதெல்லாம் இல்லை. நான் பாடம் நடத்தும்போது மாணவர்கள் நன்றாக கேட்டுக்கொள்கிறார்கள். எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். எனது மனைவி தங்கம், அரசு பள்ளியில் கணித ஆசிரியர் என்பதால் எனது படிப்பிற்கும் கல்லூரி பணிக்கும் உதவினார்,. மூத்த மகன் சிவசங்கர், பி.இ.,முடித்துவிட்டு பணியில் உள்ளார். இளையமகன் சிவரஞ்சன் காரியாப்பட்டி சேது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆணுஞூடு பயில்கிறார். இப்போதும் எனக்கு உயர்கல்வி பயில உதவி புரிவது என்னிடம் முன்பு பயின்ற பழைய மாணாக்கர்கள்தான். அவர்களில் சிலர்தான்எனக்கு பயிலவும், வகுப்பு நடத்துவதற்காக குறிப்புகள் தரவும், விடைத்தாள் திருத்தவும் உதவுகிறார்கள் என்றார்.
                               இவரை போன்ற தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த உலகம் என்றும் கடமை பட்டுள்ளது.

Monday, October 4, 2010

மருத்துவ புரட்சி படைத்த ராபர்ட்டுக்கு நோபல் பரிசு

மருத்துவ உலகில் புரட்சி ஏற்படுத்திய பிரிட்டனை சேர்ந்த ராபர்ட் எட்வர்டுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் ( உடற் கூற் இயல் ) இவர் ஆற்றிய பணிக்காக பாராட்டி இந்த பரிசு அளிக்கப்படுகிறது.
                                     
                                         இன்று நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ராபர்ட் எட்வர்டு பிரிட்டனை சேர்ந்தவர். 85 வயது ஆகும் இவர் மருத்துவ துறைக்கு அரும்பணியாற்றி இருக்கிறார் என நோபல் பரிசு அறிவிக்கும் சுவீடன் தெரிவித்துள்ளது. மேலும் இவர் உலகில் வறட்டுத்தன்மைக்கு ( மலடு) இல்லாத நிலைக்கு இவரது கண்டுபிடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.1978 ஆம் ஆண்டு தான் இவர் முதன் முதலில் டெஸ்ட்  டியுப் குழந்த்தையை உருவாக்கினார்.

                                                 டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் உலகில் 10 க்கும் மேற்பட்ட சதவீத்தனர் இதனை நம்பித்தான் இருக்கின்றனர். என்றும் கூறப்பட்டுள்ளது.

                                     
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது எப்போதும் மருத்துவ துறைக்குத்தான் முதலில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து அமைதி, இலக்கியம் என நோபல் பரிசு வழங்கப்படும். இந்த நோபல் பரிசு கடந்த 1901 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ரவீந்தரநாத் தாகூர் , அன்னைதெரசா, சர்.சி.வி.,ராமன், இந்தியாவில் பிறந்து அமெரிக்கராக வாழும் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முக்கியஸ்தர்கள்.