Monday, February 21, 2011

கிராம வளர்ச்சிக்காக பொறுப்பாக உழைக்கும் ஊராட்சித் தலைவர் ராஜு:

தன் கிராம வளர்ச்சிக்காக பொறுப்பாக உழைக்கும் ஊராட்சித் தலைவர் ராஜு: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த களிமண்குண்டு கிராமத்தின் ஊராட்சித் தலைவராக உள்ளேன். இது, மீனவக் கிராமம், அனைவரும் மீன் பிடிக்க சென்று விடுவர். குடிநீர் குழாய் உடைப்பு, சாலை சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு ஆள் கிடைக்காது.பக்கத்து ஊரில் இருந்து ஆட்களை கூட்டி வந்தாலும், "யார் குறைந்த கூலிக்கு வரத் தயாரா உள்ளனரோ, அவர்களை வைத்து தான், முடிக்கணும்'னு அலுவலக விதி உள்ளது. "வேலை முடிஞ்சதும், காசோலையாகத் தான் கூலியைத் தரணும்'ன்னும் விதி உள்ளது. அந்தக் காசு அவர்களுக்கு கிடைக்க 20 நாட்களாகிவிடும், அதனால், யாரும் வருவதில்லை.அதனால், ஊர் வேலைகள் சிலவற்றை நானே செய்து விடுவேன்.நான் படித்தது ஆறாம் வகுப்பு என்றாலும், ஊராட்சி வேலைகள் அனைத்தும் மனப்பாடமாக தெரியும். ஆரம்பப் பள்ளி, மைதானம், குடிநீர்த் தொட்டிகள், தெருக்குழாய்கள், நூலகம் என, அனைத்தையும் புள்ளி விவரங்களுடன் என்னால் கூற முடியும்.ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், என் தந்தை இறந்தபோது மட்டும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறேன்.என் கிராமத்தின் வேலைகளை பிரதமரோ, முதல்வரோ, மந்திரியோ நேரில் வந்து செய்ய முடியாது; அதனால்தான் என்னை தலைவரா தேர்ந்தெடுத்து, பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அதைக் கடைசி வரைக்கும் சரியா செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வெள்ளை வேட்டி, சட்டை போட்டு, காரில் பந்தாவா போனா மக்கள் தேவை பூர்த்தி அடையாது.


நன்றி
தினமலர்

No comments:

Post a Comment