Sunday, November 7, 2010

ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து : ஒபாமா அறிவிப்பு

மும்பை : ""அமெரிக்காவில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல  ஒப்பந்தங்கள் இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ளன,'' என்று, அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அதிபர் ஒபாமா, நேற்று மாலை மும்பையில் நடந்த அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு 21ம் நூற்றாண்டில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அதில், எந்த சந்தேகமும் இல்லை. அதற்கேற்ற வகையில், வர்த்தக தடைகளை இந்தியா குறைக்க வேண்டும். அமெரிக்காவின் 12வது வர்த்தக பங்குதாரராக இந்தியா தற்போது உள்ளது. அமெரிக்காவின் முதன்மையான வர்த்தக பங்குதாரராக இந்தியா வர முடியாது எனச் சொல்ல முடியாது. அதற்கு எந்தக் காரணமும் இல்லை.நான் மும்பை வந்து சேருவதற்கு முன்னதாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அமெரிக்காவின் போயிங் நிறுவனம், இந்தியாவுக்கு ஏராளமான விமானங்களை விற்க உள்ளது.

அதேபோல், நூற்றுக்கணக்கான எலக்ட்ரிக் இன்ஜின்களை விற்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இவை எல்லாம் 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள். இதன் மூலம் அமெரிக்காவில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.மேலும், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 2,400 மெகாவாட் திறன் கொண்ட மின் சாதனங்களை வாங்க ரிலையன்ஸ் பவர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா - அமெரிக்கா இடையே ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும். இருநாடுகளும் பலன் அடையும் வகையிலான பலமான வர்த்தக உறவுகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகமும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதன்மூலம் இருநாடுகளும் வெற்றி பெற்ற நிலையை அடைய வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் இந்தியாவில் அமைக்கப்படும் அலுவலகங்களால், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. வர்த்தகத்தில் ஒரு வழிப்போக்குவரத்தை நாங்கள் விரும்பவில்லை. வேலைவாய்ப்புகள் மற்றும் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அளிப்பதில், இருவழிப்பாதையை பின்பற்ற வேண்டும். அத்துடன் பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில், உயர் தொழில்நுட்ப துறைகளில் தடைகள் ஏற்படவும் அனுமதிக்கக் கூடாது.இந்தியா பெறும் நேரடி அன்னிய முதலீட்டில் 8 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வருகிறது. விவசாயப் புரட்சி காலங்களில் இந்தியா வளர்ச்சி அடைய அமெரிக்கர்கள் உதவினர். இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று இந்தியா. மத்திய தர மக்களை பெருமளவில் கொண்டுள்ள நாடும் இதுவே.இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

                      இந்த திட்டங்கள் அணைத்தும் வெறும் பேச்சளவில் நின்று விடாமல் செயலிலும் இருந்தால் நமது இந்தியா உலக அளவில் பெரிய முன்னேற்றம் அடையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

No comments:

Post a Comment